Monday, April 13, 2015

மன்மத ஆண்டே வருக வருக



இந்த தமிழ்ப் புத்தாண்டு எனக்கு ஒரு மிகவும் சிறப்பான ஆண்டாகும்.
இருக்காதா பின்னே. அறுபது ஆண்டுகளுக்கு முன் நான் அவதரித்த (!!!) ஆண்டாயிற்றே. ஆக இந்த மன்மத ஆண்டு வைகாசி மாதம் 12 ம் நாள் பூர நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் (26.05.2015) எனக்கு அகவை 60 முடிந்து 61 தொடங்கப் போகிறது. இப்ப சொல்லுங்க இந்த மன்மத வருடம் எனக்கு ரொம்ப சிறப்பானதுதானே.


இந்தப் புத்தாண்டை ஆவலுடனும், ஆர்வத்துடனும், எனது புத்தாண்டு கவிதையுடனும், வருக வருக என்று வரவேற்கிறேன்.


மீள் பதிவு.

புத்தாண்டு பிறக்குது

புத்தாண்டு பிறக்குது

முத்தான கோரிக்கைகள்

முன்னே வைக்கின்றேன்

முடிந்தால் நிறைவேற்றிடு

முழு முதற் கடவுளே – முடிந்தால்

முழுவதும் நிறைவேற்றிவிடு.




மொழிச்சண்டை,

இனச்சண்டை,

மதச்சண்டை,

ஜாதிச்சண்டை,

அண்டை, அயல் நாட்டுச் சண்டை

எல்லா சண்டைகளையும்

அறவே ஒழித்திடு.



கொலை, களவு, கற்பழிப்பு,

நரபலி, தீண்டாமை,

நம்பிக்கைத் துரோகம், தீவிரவாதம்

நச்சென்று நசுக்கி

நலம் கெட்டுப்போகவை.




நீ கொடுத்த இன்னுயிரை

தானே அழிக்கும்

தரங்கெட்ட செயலை

தப்பாமல் மாற்றிடு.



பிறர் பொருள்,

பிறர் மனை கவரும்

பேராசையை

கட்டாயம் விரட்டி விடு.



பிச்சையில்லா பாரதம்

நிச்சயம் உருவாக்கிடு

உழைப்பின் உயர்வு,

உயிரின் விலை,

பாரம்பரியம்,

நல்ல பழக்க வழக்கங்கள்

புரியாதவர்களுக்குப்

புரிய வைத்திடு.



முட்டாள் மனிதனை

மூளைச் சலவை செய்தாவது

முடிந்தவரை நிறைவேற்றிடு.