Tuesday, October 18, 2016

ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.


கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு
அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.
ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.
அது பறந்து போகும் போது
ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது.
காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன?
அவரிடம் குருவி வழி கேட்டது.
“எனக்கு முழு விபரம் தெரியாது.
தெரிந்த வரை சொல்கிறேன்.
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.
ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும்
சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. 



குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.
பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,
“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.
பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.
பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.
உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.
இன்னொரு சிறகுதானே,
தந்தால் போச்சு என்று
குருவியும் சம்மதித்தது.
பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.
இப்படியே அந்தக் குருவி,
அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.
அவர்களும் வழி சொல்லிவிட்டு
குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.
குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில்
வழி சொன்னவர்களுக்கெல்லாம்
ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக,
அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்.....
வந்தே விட்டோம்......
இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.
குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால், இதென்ன....
ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ,
என் உடம்பெல்லாம் கனக்கிறதே.
கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.
மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.
பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.
குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.


இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று
அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
குடும்பத்துடன் வெளியே செல்வது,
பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது,
பிடித்த படம் பார்ப்பது,
பிடித்த கோவிலுக்கு போவது,
பிடித்த உடை உடுத்துவது,
பிடித்த உணவு உண்பது
என்று
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.
எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.
ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."
"இந்த நிமிடம் மட்டுமே இறைவன் நமக்கருளியது".




Monday, July 4, 2016

என் இனிய இலங்கைப் பயணம் - பகுதி 2


 கொழும்பு விமான நிலையத்திலிருந்து 
கண்டி செல்லும் வழியில் நான் எடுத்த புகைப்படங்கள். 









சிங்கள மொழி எழுத்துக்களும் நம்ப தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல ஜாங்கிரி, ஜிலேபியை பிச்சு போட்டது போல் தான் இருக்கிறது.









தொடரும்...........................

Saturday, May 28, 2016

என் இனிய இலங்கைப் பயணம் பகுதி 1

எனது பிறந்த நாளான இன்று (29.05.2016) ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறேன்.  
என்ன செய்ய.  
குடும்பத் தலைவின்னா சும்மாவா?   
சரி இனி நிறைய எழுதணும்ன்னு வாழ்த்துங்கள்.


முதல் வெளிநாட்டுப் பயணம்




சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் என்பது மாம்பலத்தில் இருந்து 5B பேருந்தைப் பிடித்து திருமயிலை செல்வது போல் இருக்கலாம்.  ஆனால் எங்களைப்போல் வெளிநாட்டுப் பயணம் வாய்க்குமா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு…………   ரொம்பவும் ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருக்கத்தானே செய்யும்.  (PASSPORTஏ இப்பதானே எடுத்தோம்).  கடல்கடந்து ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன் அந்தமானுக்கு.  அதுவும் நம் நாட்டைச் சேர்ந்ததுதானே.   5 நாட்கள் இலங்கைப் பயணம் ஒன்று ஏற்பாடு செய்தோம்.   ரொம்பவும் ஆர்வமாக காத்திருந்த நாள் வந்தது,
(இதுக்கே இப்படீன்னா….)

மே மாதம் 3ம் தேதி காலை 10 மணி விமானத்தில் நானும் என் கணவரும் புறப்படத் தயாராகி விட்டோம்.   10 மணி விமானத்திற்கு காலை 7 மணிக்கே கிளம்பி விட்டோம். மகன் விமான நிலைத்தில் கொண்டு விட்டு விட்டுச் சென்றான்.CHECK IN முடிந்து EMIGRATION க்கு சென்றோம்.  CHECK IN க்யூவில் நிற்கும் போதே என் கணவர், ’பாரு, நீ வெச்சிருக்கற இட்லி பொட்டலம், தண்ணி பாட்டில் எல்லாம் குப்பைத் தொட்டிக்குதான் போகப் போறது.  இதெல்லாம் வேண்டாம்ன்னா கேக்கறயா, தண்ணியையாவது குடிச்சு காலி பண்ணு’.  என்றார்.   நான் பதிலே சொல்லலை.  IMIGRATION முடிந்து இட்லி சகிதமாக இடம் தேடி உட்கார்ந்து காலை சிற்றுண்டியை 9 மணிக்கு முடித்துக் கொண்டோம்.

 நாங்கள் பயணித்த விமானம்









ம்ம்ம். விமானத்தில் ஏறியாச்சு.  அழகான புடவைக்கட்டுடன் விமானப் பணிப் பெண்கள்.  ’AYU BOWAN’  (LONG LIVE என்று அர்த்தமாம்) வரவேற்றார்கள். 




நம்ப மதுரைப் பக்கம் எல்லாம் பின் கொசுவம் வைத்துக் கட்டுவார்களே, கொஞ்சம் அதுக்கு தங்கச்சி மாதிரி ஒரு கட்டு.  எனக்கு ரொம்பப் பிடித்தது.  மீண்டும் ஒரு முறை இலங்கைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தால் (ஆசையைப் பார்ரா) கண்டிப்பாக அவர்கள் மாதிரி புடைவை கட்டிக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த முறை வாய்ப்பை தவற விட்டு விட்டேன்.

சிறுவர், சிறுமியருக்கு வரை புத்தகமும் வண்ண பென்சில்களும் அடங்கிய ஒரு உரையை கொடுத்தார் விமானப் பணிப்பெண்.  


அட இந்த சிறுமி அதை வாங்கி அழகாக வைக்கிறாள் பாருங்கள்.




மிகவும் சிறிய குழந்தைகளுக்கு SOFT TOYS கொடுப்பார்களாம்.  (எல்லா அயல் நாடு செல்லும் விமானங்களிலும் இப்படி கொடுப்பார்களாமே– இப்ப தானே நமக்கு தெரியறது).

எங்களுக்கும் குடுத்தாங்க.  அதை ஏன் கேக்கறீங்க.  பொங்கல் மாதிரி, அரிசியும், முழுப்பயறும் போட்டு வேக வைத்து தட்டில் கொட்டி பெரிய வில்லைகளாக.  நீங்க எதிர்பார்க்கற மாதிரி இல்லீங்க.  மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கறிவேப்பிலை இதெல்லாம் மருந்துக்குக் கூட இல்ல.  அதான் சொன்னேனே பொங்கல் மாதிரின்னு.  ம்ம்ம்ம். அதுக்கு தொட்டுக்கு அது அதை விட அருமை.  வெங்காயம், புளி, உப்பு அவ்வளவுதான்.  (வெந்ததுதான் பச்சையாக இல்லை). அப்புறம், ஒரு கப்பில்  யோகர்ட் – அதான் தயிரில் சர்க்கரை போட்டு,  அப்புறம், காபி அல்லது டீ,  ஒரு கப்பில் சர்க்கரை, பால் பொடி, போட்டுக்கொண்டால் அவர்கள் காபி அல்லது டீ டிகாக்க்ஷனை சுடச்சுட ஊற்றுகிறார்கள்.   ரொம்ப கஷ்டப்பட்டு அந்த பொங்கல் மாதிரியை முழுங்கி வெச்சேன்.  தொட்டுக்க வைத்ததை தொடவே இல்லை.   கொஞ்சம் வலது பக்கம் திரும்பிப் பாத்தா நம்பாளு (அதான் என்ற ஊட்டுக்காரர்) சாப்பிட்டு முடிச்சுட்டார்.  ஏங்க வீட்டுல உப்பு கம்மி, காரம் கம்மி, 33 வருஷமா என்ன சமைக்கிறன்னு அப்பப்ப நக்கீரரா இருக்கறவரு இங்க பாத்தா கப்பு சிப்பு.  ம்  தட்டு காலி.  நான் பார்த்ததும் ஒரு அசட்டு சிரிப்பு,  நம்ப அருமை தெரியறதுக்காகவே இவங்கள வெளியில இந்த மாதிரி அடிக்கடி கூட்டிக்கிட்டுப் போகணும்.   

ஒன்றரை மணி நேர பயணம் என்றார்கள்.  ஒரு மணி நேரத்திலேயே கொழும்பு விமான நிலையம் சென்று அடைந்து விட்டது விமானம்.    

வெளியே வந்து  EMIGRATION வரிசைக்கு சென்ற போது, எங்களைப் பார்த்த உடனே இந்திய PASSPORT இருந்தால் FORM வேண்டாம்.  PASSPORT மட்டும் காண்பித்தால் போதும் என்று சொல்லி விட்டார்கள்.   பார்ரா நம்ப PASSPORTக்கு இருக்கற மரியாதையை என்று பெருமிதப்பட்டுக் கொண்டேன்.  
உள்ளுக்குள் கொஞ்சம் பயம், ஒருவேளை நம்மை அழைத்துச் செல்ல யாரும் வராவிட்டால்.   மகனிடம் கிளம்பும் போதே சொல்லி வைத்திருந்தேன்.  MEETING அது இது என்று பார்க்கவில்லை என்று சொல்லக்கூடாது.  1130 மணியிலிருந்து WHATSAPP ஐயே பார்த்துக் கொண்டிரு என்று.   அவன் எல்லாம் கண்டிப்பா வருவா போம்மா என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.   வெளியில் வந்ததும் PLACARD வைத்துக் கொண்டிருப்பவர்களை பார்த்துக் கொண்டே வந்தோம்.  நல்லவேளை என்னவரின் பெயர் கொண்ட பதாகையைப் பார்த்ததும் அப்பாடா என்றாயிற்று.  (பதாகை – பார்த்தீங்களா, இலங்கைக்குள் காலடி வைத்ததும் என்ன மாதிரி தூய தமிழ் வருது பாருங்க.  ஆமாம்.  அவங்க தமிழ் என்ன ஒரு அழகு).   

திரு மாலிக், ஓட்டுனர் மகிழுந்துடன் எங்களுக்காகக் காத்திருந்தார்.  

வெளியே வந்து மகிழுந்துக்காகக் காத்துக் கொண்டிருந்த விமானப் பணிப்பெண்கள்.  




என்னவர் 


BANK OF CEYLON ல் டாலர்களைக் கொடுத்து இலங்கைப் பணமாக மாற்றிக் கொண்டு மகிழுந்தில் ஏறி அமர்ந்தோம். 

தொடரும்..............