Monday, May 1, 2017



குல தெய்வம்


என்னடா இவ, குலதெய்வம்ன்னு தலைப்பை போட்டுட்டு  TYPEWRITERபடத்தை போட்டு இருக்காளேன்னு யோசிக்கிறீங்களா?  முழுக்க படியுங்க.  படிச்சுட்டு சொல்லுங்க.


24.12.2012 அன்னிக்கு கார்த்தால 0715 மணிக்கு வைகுண்ட ஏகாதசியாச்சேன்னு நன்மங்கலம் நீல வர்ணப் பெருமாளை தரிசனம் பண்ண நன்மங்கலம் ரோட்டில் திரும்பி ஒரு பத்தடிதான் நடந்திருப்பேன்.  இளையராஜா / ஏ ஆர் ரஹ்மானின் இன்னிசை மாதிரி என் காதுல டைப் அடிக்கற ஓசை கேட்டுது.  நிமிர்ந்து பார்த்தா ‘VINOD TECHNICAL INSTITUTE’.  ஆஹா, இந்த இன்னிசையைக் கேட்டு எவ்வளவு நாள், ஏன் வருஷமே ஆச்சு.  ஆமாம் இப்ப COMPUTERல தான டைப் அடிக்கறோம். சத்தமே கேக்காதே, FEATHER TOUCH.  




செய்தித்தாள்களில் 2011ஆம் ஆண்டு வந்த இந்த செய்தியைப் படித்தபோது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

கம்ப்யூட்டருக்கு வழிகொடுத்து விடைபெற்றது டைப்ரைட்டர்
மும்பை : உலகின் கடைசி டைப்ரைட்டிங் நிறுவனமான கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ்,மும்பையில் உள்ள தனது உற்பத்தி யூனிட்டை மூடியுள்ளது. உலகம் முழுவதும் ஒருகாலத்தில்அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட டைப்ரைட்டிங்,கம்ப்யூட்டர் வருகையால் கணிசமாக குறைந்தது. மேற்கத்திய நாடுகளில், 10 ஆண்டுகளுக்கு முன்பேதட்டச்சு காணாமல் போனது. இந்தியாவில் தற்போதும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நி‌லையில்சமீபகாலமாகடைப்ரைட்டிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தட்டச்சு பயன்பாடு குறைந்து,கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்துடைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனங்கள் பல மூடப்பட்டன. ஆனாலும்கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம்,டைப்ரைட்டிங் மிசின்களை தயாரித்து வந்தது. உலகின் கடைசி டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனமாக இருந்த ‌கோத்ரெஜ் அண்ட் போய்ஸ் நிறுவனம்அதனை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதுகுறித்துஇதன் உயர் அதிகாரி மிலிந்த் துக்லே கூறியதாவது,கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகரித்து விட்டதால்இதன் பயன்பாடு குறைந்து விட்டது. பயன்பாடு குறைந்ததால்தங்களுக்கு வரும் ஆர்டர்களும் முற்றிலும் இல்லாமல் போனது. தற்போதுதங்களிடம் 200 டைப்ரைட்டிங் மெசின்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இவையும் அரபுமொழி டைப்ரைட்டிங் மெசின்களே ஆகும் என்றும்இதனையடுத்து வேறவழியின்றி உற்பத்தி யூனிட்டை மூடிவிட்டதாக அவர் தெரிவித்தார்.




கோத்ரெஜ் கம்பெனியின் டைப்ரைட்டர் பிரிவு 1955ல் (நான் அவதரித்த ஆண்டாக்கும்) தொடங்கப்பட்டது இந்தியாவின் சுதந்திரத்துக்கும் தொழில்மயத்துக்கும் டைப்ரைட்டர் ஓர் அடையாளம் என்று பிரதமர் நேரு புகழாரம் சூட்டினார்.



ஆனால் சத்திரத்துத் திண்ணையில் படுத்திருந்த நாயை விரட்டி விட்டு மனிதன் ஆக்ரமித்துக் கொள்வது போல் டைப்ரைட்டரை விரட்டி விட்டு அலுவலகம், வீடு, தொழிற்சாலைகள் என்று எல்லா இடங்களையும் கம்ப்யூட்டர் ஆக்கிரமித்துக் கொண்டது.  போர்ட்டபிள் டைப்ரைட்டர்களின் இடத்தை லேப்டாப் பிடிங்கிக் கொண்டது. 


பிரதமர் நேரு சொன்ன அடையாளத்தை அடையாளமே இல்லாமல் அழிக்கத் தொடங்கியது கம்ப்யூட்டர்.







நாங்க படிச்ச காலத்துல எல்லாம் SSLC முடிச்சதும், ஏன் பத்தாவது முடிஞ்ச லீவுலயே TYPEWRITING CLASS சேர்த்துடுவாங்க.  விருப்பம் இருந்தால் அப்படியே சுருக்கெழுத்தும்.  எத்தனையோ குடும்பங்கள்ள விளக்கேத்தி வெச்சிருக்கு இந்த TYPEWRITING & SHORTHAND இரண்டும்.



நான் GOVERNMENT POLYTECHNIC FOR WOMENல் (தற்போதைய பெயர்DHARMAMBAL POLYTECHNIC) மூன்று வருட DIPLOMA IN COMMERCIAL PRACTICE COURSE 1970 – 1973 படித்தேன்.  அதில் B.COM SUBJECTS மற்றும் ENGLISH TYPEWRITING, SHORTHAND HIGHER.  


அதே நேரத்தில் என் COUSIN கோவையில் இதே COURSE  இரண்டு ஆண்டுகள் படித்து கோவை SUGARCANE BREEDING INSTITUTE ல் பணியில் சேர்ந்திருந்தார்.  அதனால்தான் என் அம்மா நீயும் இதேDIPLOMA படி, கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும் என்று சொன்னார்கள்.  முதல் வருடம் காலேஜ் போகவில்லையே என்று வருத்தம் கொஞ்சம் இருந்தது.  இரண்டாம் வருடம் வருத்தத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.  



3 வருட படிப்பை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்த உடனே நல்ல அரசாங்க வேலை.  ஆயிற்று 39 வருடங்கள் 3 மாதங்கள் பணியாற்றிவிட்டாகிவிட்டது.  இன்னும் பாக்கி இருப்பது 1 வருடம் 5 மாதம்.

இதே குலதெய்வம் தான் சமூக அந்தஸ்தைக் கொடுத்தது, பலரின் பாராட்டையும் பெற்று கொடுத்தது. 



இப்பதானே கம்ப்யூட்டர் ஜாலம் எல்லாம்.

டைப்ரைட்டரில் ஒரு W, அதுக்கு மேல ஒரு &,  அந்த மேல ஒரு /, ஒரு SOLDIER மாதிரி வரும். 

அப்புறம் ஒரு தேர் மாதிரி டிசைன் செய்தது.   சின்னச் சின்ன விஷயங்கள்.  எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அந்தக் காலத்துல என் அப்பா ஒரு கடிதத்தை சிவலிங்கம் மாதிரி அடித்திருப்பார். 


 ஆனா ஒண்ணுங்க. இந்த செய்தியையும் கேளுங்க.
ரொம்ப அலட்டிக்காத கம்ப்யூட்டரே.

மிசோரம் மாநிலத்தில் கடுமையான மின்வெட்டு நிலவுவதால்அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு,டைப்ரைட்டிங் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.



யார் கண்டது, மீண்டும் பழைய டைப்ரைட்டர்களுக்கு பூரண கும்ப வரவேற்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். 



என்னை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற ‘VINOD TECHNICAL INSTITUTE’க்கு நன்றி.
 இப்ப சொல்லுங்க, எனக்கு, என் குடும்பத்துக்கு, ஏன் எத்தனையோ குடும்பங்களுக்கு இந்த TYPEWRITER (அதோட மவுசு குறைந்தாலும்) குலதெய்வம் தானே.

மீள் பதிவு

10 comments:

  1. உண்மைதான்.. புதுசு வர வர பழசுக்கெல்லாம் விடைகொடுப்பது சோகமான ஒரு நிகழ்வுதான், ஆனா நீங்க சொல்வதைப்போல, அப்பப்ப கை கொடுப்பதும் பழயவைதான்...

    ஓ நீங்க பிறந்த ஆண்டில்தான் எங்கட சித்தியும் பிறந்தா(அம்மாவின் தங்கை):)...

    நல்ல ஒரு அந்தநாள் ஞாபகங்கள் ஜே மாமி. இன்று தொழிலாளர் தினமாச்சே உங்களுக்கு விடுமுறை இல்லையோ?...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா. உங்க வரவு எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது.

      //ஓ நீங்க பிறந்த ஆண்டில்தான் எங்கட சித்தியும் பிறந்தா(அம்மாவின் தங்கை):)...//

      சூப்பர்.

      //நல்ல ஒரு அந்தநாள் ஞாபகங்கள் ஜே மாமி. இன்று தொழிலாளர் தினமாச்சே உங்களுக்கு விடுமுறை இல்லையோ?...//

      அதிரா ரிடையர் ஆகி மே 31 2017 அன்று மூன்று வருடம் ஆகப் போகிறது. ஆனா வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணுக்கு ரிடையர்மெண்ட் கிடையாதே. என்ன ஆபீசுக்கு போய் வரும் நேரம் மட்டும் மிச்சம்.

      Delete
  2. நானும் தட்டச்சு தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் மேல்நிலைத் தேர்ச்சி பெற்றேன். சுருக்கெழுத்து என் மூளையில் நுழையவில்லை. ஆனால் இப்போது சம்பந்தமில்லாத பாணியில்தான் இருக்கிறேன். அப்படியும் முழுமையாகச் சொல்ல முடியாது. அப்போது கற்றுக்கொண்ட தட்டச்சுப் பயிற்சிதான் இப்போது கணினியில் விரல் கொண்டு விளையாட முடிகிறது!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம். வரவுக்கு நன்றி.

      //அப்போது கற்றுக்கொண்ட தட்டச்சுப் பயிற்சிதான் இப்போது கணினியில் விரல் கொண்டு விளையாட முடிகிறது!//

      உண்மை தான்.

      Delete
  3. மிகச் சரியான தலைப்பு

    அப்போது (நான் 52 தான் )
    என்ன படித்திருந்தாலும் கூடுதல் தகுதியாக
    தட்டச்சும் படித்திருக்கவேண்டியது அவசியம்
    எனக் கருதிய கால்ம்

    அந்த நினைவுகளில் மீண்டும் மூழகச்
    செய்து போனது தங்கள் அருமையான பதிவு

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      தட்டச்சு எவ்வளவு குடும்பங்களுக்கு சோறு போட்டிருக்கிறது.

      Delete
  4. என்னை என் அப்பா டைப்ரைட்டிங் படிக்கச் சொன்னபோது எனக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன டைப்பிஸ்டாவா போகப்போறேன் என்று சொன்னேன். ஆனா சேர்ந்தபின், ஹையரும் முதல் வகுப்பில் பாஸ் பண்ணினேன். ஹைஸ்பீடிலயும் டைப் பண்ணுவேன் ஆனால் தேர்வுக்குச் செல்ல சந்தர்ப்பம் இல்லை. தமிழ் டைப்பும் கற்றுக்கொண்டேன் (இன்னொரு இன்ஸ்டிடியூட், நான் முதல் வகுப்பில் ஹையர் பாஸ் பண்ணினதைப் பார்த்து என்னைச் சேரச்சொன்னார்கள்).

    ஆனா, கணிணித் துறைக்கு வந்தபின், என் டைப்ரைடிங் பயிற்சி அனுபவம் மிகவும் உபயோகமாக இருந்தது (இருக்கிறது). அந்தக் காலத்தில் புரோகிராம் எழுதும்போது மனசு சொல்ற வேகத்துக்கு கணிணில டைப்பண்ணுவேன்.

    ஷார்ட் ஹேண்ட், டைப்ரைட்டர் எல்லாம் லட்சக்கணக்கான பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா? தி.நகரில் (90களில் பார்த்திருக்கிறேன்), ஷார்ட் ஹேண்ட் கண்டுபிடித்தவரின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நான் கேள்விப் பட்டிருக்கிறேன். திநகரில் SHORTHAND ஐ கண்டு பிடித்த PITMAN அவர்களின் பிறந்த நாள் அன்று சுருக்கெழுத்து போட்டிகள் கூட நடத்துவார்கள். கலந்து கொண்டதில்லை. ஆனால் செய்தித்தாளில் பார்த்திருக்கிறேன். அந்த நாட்களில் கொஞ்சம் EXPOSURE குறைவு தான்.

      Delete
  5. ம்ம்ம்ம்ம் மலரும் நினைவுகள்! நானும் எல்லாமும் பாஸ் பண்ணி இருக்கேன்! :(

    ReplyDelete
    Replies
    1. நம்ம காலத்துல இந்த மலரும் நினைவுகள் இல்லாதவா ரொம்ப கொஞ்சமாத்தான் இருப்பா.

      Delete